Guru

  •    > Details
  • தனுசு(குருபெயா்ச்சி)

    தனுசு - குரு பெயர்ச்சிப் பலன்கள்

    எந்த சோதனை வந்தாலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று வாழ்பவர்கள் தனுசுராசிக்காரர்கள். முலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கிய தனுசு ராசியைச் சேர்ந்த அன்பர்கள் போராட்ட குணம் உள்ளவர்கள். நினைத்ததை சாதிக்கும்வரை உறக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட தனுசுராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி அமையும் என்று பார்ப்போம்.

    இதுவரை 5 - ம் வீட்டில் அமர்ந்து சகலவிதமான நன்மைகளையும் தந்துகொண்டிருந்த குருபகவான் மே 1 - ம் தேதி முதல் 6 -ம் இடம் சென்று மறைகிறார். இதனால் அடுத்த ஓர் ஆண்டுக்கு நீங்கள் அனைத்திலும் நிதானமாகச் செயல்பட வேண்டும். அதேவேளையில் குருபகவான் அவ்வப்போது உங்களுக்கு யோகபலன்களை அள்ளித்தருவார். என்றாலும் அவ்வப்போது வெளிவட்டாரத்தில் மரியாதை குறைவான சம்பவங்கள் நிகழும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் அடிக்கடி வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகும். ஒரளவு நல்லதே நடக்கும்.

    வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதைச் செய்து முன்னேறப் பாருங்கள். உங்களிடம் பழகுபவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். என்றாலும் சில நேரங்களில் ஏமாற்றங்களை உணருவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். வீண் சந்தேகத்தாலும், ஈகோப் பிரச்னையாலும் பிரிவுகள் வரக்கூடும். எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

    தவணை முறையில் பணம் செலுத்திப் புது வாகனம் வாங்குவீர்கள். தாழ்வுமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள், சலசலப்புகள் உண்டாகும். வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். நெடுநாள்களாக நெருங்கிப் பழகிய நண்பர்கள் கூட நீங்கள் மாறி விட்டதாகக் குறைபட்டுக் கொள்வார்கள்.

    குருபகவான் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பேச்சில் ஒரு நிதானம் பிறக்கும். வராமலிருந்த பணம் கைக்கு வரும். வழக்கில் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த சந்தேகம் தீர்ந்து ஆரோக்கியமான விவாதங்கள் வந்து நீங்கும். தாம்பத்யம் இனிக்கும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலை கிடைக்கும். டிரஸ்ட் தொடங்குவீர்கள். கௌரவப்பதவிகள் தேடி வரும். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு கூடும். சூழ்ச்சியால் உத்தியோகத்தில் பதவியுயர்வை  இழந்தீர்களே! இனி அதிக சம்பளத்துடன் பதவியுயரும்.

    குரு 12-ம் வீட்டை பார்ப்பதால் வீண் செலவுகளையெல்லாம் கட்டுப்படுத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தள்ளிப்போன உங்கள் மகளின் கல்யாணத்தை வி.ஐ.பிகள் முன்னிலையில் நடத்துவீர்கள். அரைகுறையாக நின்று போன கட்டடப் பணிகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள். சிலர் வேறு கட்சிக்கு மாறுவார்கள். சகாக்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.


    குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


    1.5.24 முதல் 12.6.24 வரை உங்களின் பாக்கியாதிபதி சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்குக் கூடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. புதிய வேலை கிடைக்கும். தந்தை உதவுவார். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். திருமணம், சீமந்தம், காதுகுத்து என்று வீடு களைகட்டும். அரசால் ஆதாயமுண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டிற்குப் புதிய சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள்.

    12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை உங்களின் அஷ்டமாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் வீண் அலைச்சல்கள் அதிகரித்துக் கொண்டே போகும். திடீர் பயணங்கள், வீண் செலவுகள் என அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். சிறு சிறு விபத்துகள், உடல்நலக்குறைவுகள் வந்து போகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம்.

    19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை உங்களின் பூர்வ புண்ணிய விரையாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். மகனுக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். வீடு மனை வாங்கும் வாய்ப்பு அமையும். பெயர், புகழ் கௌரவம் கூடும்.

    வியாபாரம் : பெரிய முதலீடுகளை தவிர்த்துவிட்டு, இருப்பதை வைத்து முன்னேறப் பாருங்கள்.  எவ்வளவு அள்ளித்தந்தாலும் வேலையாட்கள் நன்றியில்லாமல் இருக்கிறார்களே என உணர்ச்சிவசப்படுவீர்கள். போட்டிகள் அதிகரிக்கத் தான் செய்யும். பாக்கிகளை அலைந்து வசூலிப்பீர்கள். உங்களின் அன்பான பேச்சால் புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இரும்பு, கெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று தெரியாத துறையில் இறங்க வேண்டாம். பங்குதாரர்கள் எடுத்தெறிந்துப் பேசினாலும், ஆத்திரப் படாதீர்கள்.
     
    உத்தியோகம் : பல வேலைகளை நீங்களே பார்க்க வேண்டி வரும். ஆனால் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். காத்திருந்த பதவியுயர்வு, சம்பளயுயர்வு எல்லாம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உங்கள் இருக்கைத் தேடி வரும். வெளிநாட்டுத்தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். கணினித் துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும்.
    கலைஞர்களே! இழந்த புகழை மீண்டும் பெற யதார்த்தமான படைப்புகளைக் கொடுங்கள். அரசு பாராட்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.
     
    இந்த குரு மாற்றம் அவ்வப்போது உங்களை அலைகழித்தாலும் மறைமுக வெற்றியையும் தருவதாக அமையும்.